About

Wednesday 21 August 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் IV



தொடரும் நம் சூழல் பயணங்கள் IV


கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 18) நான் கொடைக்கானல் அருகிலுள்ள "பண்ணைக்காடு" என்ற கிராமத்திலுள்ள பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு "வௌவால்களும் அவற்றின் அவசியமும்" என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த பழங்குடி குழந்தைகள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த மூன்று வருடங்களாக இங்கு தங்கி இருக்கிறார்கள், பண்ணைக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.   

நான் செல்லும் முன்னே அவர்கள் அனைவரும் வகுப்பில் இருந்தார்கள். காலை பத்து மணிக்கு நிகழ்ச்சியை தோழர். அசோக் ராஜன் தொடங்கி வைத்தார். 


நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களையும், அட்டைகளையும் பார்வைக்கு வைத்துவிட்டு, மிக இயல்பான, எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு வகுப்பை ஆரம்பித்தேன். 


பங்கேற்பாளர்கள் அனைவரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். 



பின்னர், கொடைக்கானலில் உள்ள விலங்குகளை பற்றியும், விலங்குகளின் முக்கியத்துவம் பற்றியும் சொல்லி விட்டு, அவர்களை ஐந்து குழுக்களாக பிரித்து, "அட்டைகளை சேர்த்தல்" விளையாட்டு விளையாடினோம். 


பின்னர் குழு தலைவர், அவர்கள் சேர்த்த விலங்கின் பெயரையும், அவற்றின் சூழல் நன்மைகளையும் சொன்னார்கள்.




"நம் காடுகள்" "அழியும் விலங்குகள்" என்ற காணொளியை காண்பித்துவிட்டு, அடுத்த நிகழ்வான "கேள்வி பதில் 10" பகுதிக்கு சென்றேன். 


பங்கேற்பாளர்களுக்கு பத்து கேள்விகள் கேட்கபட்டு, அவர்கள் பதில் சந்தோசமாக இருந்தால் அதற்குரிய இடத்திலும், வருத்தமாக இருந்தால் அதற்குரிய இடத்திலும், நடுநிலையாக இருந்தால் அதற்குரிய இடத்திலும் சென்று நிற்க வேண்டும். இதில் பெரும்பாலும் அனைவருமே எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து, மிக உற்சாகமாக கலந்துகொண்டனர். 


ஒவ்வொரு சிறிய, பெரிய விலங்குகளின் அவசியமும், அவற்றின் நன்மைகள் பற்றி விளக்கும் பாடல் ஒன்றை பாடி காட்டிவிட்டு, மதிய உணவை அவர்களுடன் சாப்பிட்டேன். 


பின்னர் குழந்தைகளுக்கு, "இயற்கை" காணொளியை காண்பித்துவிட்டு, energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்த நிகழ்விற்கு சென்றேன். 

மரங்கள் பற்றி அவர்கள் பல செய்திகளை சொன்னார்கள், நான் கொஞ்சம் அவேர்களுக்கு தெரியாத துணுக்குகளை சொல்லிவிட்டு, இன்றைய வகுப்பின் தலைபிற்குள் சென்றேன். ஆம். வௌவால்கள். 



அவர்களில் சிலர் வௌவாலை பிடித்து, சுட்டு உண்பதாகவும், அடிக்கடி இறைச்சிக்காக பிடிப்பதாகவும் சொன்னார்கள். தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள தொடர்பைச் சொல்லிவிட்டு, வௌவால்கள் குறித்த தகவமைப்பு, அவற்றின் குணங்கள், வாழிடம், வகைகள், சிறப்பியல்புகளை சொன்னேன். 


அனைவரும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, Zoo Outreach Organization வழங்கிய வௌவால் அட்டைகள் அடங்கிய சிறிய பாக்கெட்டை (BAT EDUCATION) கொடுத்து, அவர்களுக்கு புரியும் வண்ணம் வௌவால் குறித்த நிறைய தகவல்களைச்  சொன்னேன். 


"வௌவால்க்காக தீபாவளியன்று பட்டாசை தியாகம் செய்த கிட்டாம்பாளையம் கிராமம்" என்ற ஒரு உண்மை செய்தியை இந்த குழந்தைகளுக்கு சொல்ல மறந்துவிட்டேன். 


வௌவால் பொம்மை மூலமாக சில கருத்துகளை சொன்னேன். இந்த குழந்தைகள் மிக சுலபமாக புரிந்துகொண்டனர், என்னிடம் சில கேள்விகளும் கேட்டனர். உலகத்தில் மிக பெரிய வௌவால் - பற்றிய ஒரு சிறிய வீடியோவை காண்பித்தேன். அப்புறமாக வௌவால் அழிவிற்கு காரணிகள், அதை எவவாறு நாம் பாதுகாக்கலாம் என்பன போன்ற சில கருத்துக்களை சொன்னேன். 


கடைசியாக அனைவரும் எழுந்து நின்று நம் காடுகளையும், விலங்குகளையும், குறிப்பாக இந்த பழந்தின்னி வௌவால்களையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொன்டனர். 


தோழர் அசோக் ராஜன் நன்றி உரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

அடிப்படையில் இந்த குழந்தைகள் எப்போதும் சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு விலங்குகள், தாவரங்களை இனம் கண்டறியும் அடிப்படை உக்திகள் தெரிகிறது, நான் கண்டேன்.

இந்த கொடைக்கானல் வனங்களிலே வாழும் இவர்களை மேலும்  மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இந்த வனத்தையும், விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரு நல்ல மாணவர்களாக, அடிப்படை அறிவியல் மேல் ஆர்வம் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களாக உருவாகலாம். 


துள்ளலான குழந்தைகள், ஓயாமல் பெய்த மழை, அமைதியாய் அசையும் மரங்கள், ஆரவாரத்தில் நான்..அதே சந்தோசத்துடன்...இந்த நாள் மிக சிறப்பாக அமைந்தது. 


இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு BAT EDUCATION POCKET வழங்கிய என் ஜூ அலுவலக, ஆசிரியர்கள் தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். 

                                                        **********************

0 comments:

Post a Comment