தொடரும் நம் சூழல் பயணங்கள்: VI
நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:
நன்னீர் உயிரினங்களின் பாதுகாப்பை பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக Zoo Outreach Organization மற்றும் Wildlife Information and Liaison Development society பலவிதங்களில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு மிக பெரிய நிகழ்வாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டயுள்ள ஆறு மாநிலங்களில் "நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு" நிகழ்ச்சியை அவர்கள் மொழியில், அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய அறிவியலுடன் நடத்துவது.
அதற்கான முதல் நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் ஆரம்பமாகியது. பாளையம்கோட்டை புளோரன்சு சுவைன்சன் மேல்நிலைப்பள்ளியில் 14-10-2013 அன்று நெல்லை மாவட்ட பசுமை கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், சூழல் நண்பர்களுக்கும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை தேசிய பசுமைப்படையும், செயின்ட் சேவியர் கல்லூரியும், தமிழ் நாடு வனத்துறையும் இணைந்து நடத்தியது. இதில் ஆசிரியர். டேனியல் மற்றும் நான் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். வந்திருந்த அனைவர்க்கும், நன்னீர் பல்லுயிரினத்தின் அவசியமும், ஏன் பாதுகாக்கபட வேண்டும் என்ற தகவல்களை பல செயல்பாடுகள் மூலம் விளக்கினோம். இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட உதவி வன பாதுகாவலர் (ACF) சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், பேராசிரியர் செலவின் சாமுவேல், ஆசிரியர் பாக்யநாதன் இருந்தனர்.
Zoo Outreach Organization விஞ்ஞானி டேனியல் அவர்கள் அறிமுக உரையில் நன்னீர் அமைப்புகள், நன்னீர் உயிரினங்கள், தினசரி பயன்படும் நன்னீர் அளவுகள், நன்னீர் பல்லுயிரியம் பற்றி விவரித்தார். தேநீர் இடைவேளைக்கு பின்னர் நன்னீர் வகைகள் பற்றி சொன்னார்கள். பின்னர் நான் மேற்கு தொடர்ச்சி மலையின் விவரங்களை சொனேன். அதாவது மேற்குத்தொடர்ச்சி மலையின் நீளம், அகலம், மொத்த பரப்பளவு, ஆண்டு மழையளவு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பயனடையும் மாநிலங்கள், பாலக்காடு கணவாய் பற்றியும் விளக்கினேன்.
அப்புறமாக டேனியல் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்கள் என்ற வரைபட செயல் விளக்கத்தை ஆறு பேர் கொண்ட குழுவாக செய்ய சொன்னார்கள்.
பின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் வரைபடத்தை கொடுத்து அதன் பெயர்களை அதில் எழுத சொன்னார்கள். இதில் முதலில் கொடுக்கப்பட்ட துண்டாக்கபட்ட வரைபடத்தை குழுக்கள் இணைத்து அதில் உள்ள பெரிய ஆறுகள் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிக ஆர்வமாக இதனைச் செய்தனர். பின்னர் ஆறுகளின் பெயர்களை ஓவ்வொரு குழுக்களும் சொன்னார்கள். பின்னர் நான் நான்கு வகை நன்னீர் குழுக்களை அறிமுகம் செய்தேன். அவையாவன:
1. நன்னீர் மீன்கள்
2. தட்டான்கள் & ஊசித்தட்டான்கள்
3. நத்தைகள்
4. நீர் தாவரங்கள்
அவற்றின் உலகளாவிய பரவல், எண்ணிக்கை விளக்கினேன். பின்னர் இந்தியாவில் அவைகளின் எண்ணிக்கையும், இந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அவைகளின் எண்ணிக்கையும் சொன்னேன். அப்புறமாக, நமது மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காண முடியாத பல நன்னீர் உயிரினங்கள் சிலவற்றை பற்றி சொல்லிவிட்டு, இந்த நான்கு வகை குழுக்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி சொன்னேன்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள அழியும் விளிம்பிலுள்ள, ஆபத்திலுள்ள மற்றும் அச்சுறுத்தலில் உள்ள பலவகையான தாவரங்கள் பற்றி கூறினேன்.
அப்புறமாக நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் எப்படி நன்னீர் மற்றும் நன்னீர் உயிர்களை பாதுகாக்கும் என சொன்னேன். விஞ்ஞானி டேனியல் அவர்கள் நன்னீர் பல்லுயிரியம் என்ற (நாம் தயாரித்த) தகவல் பெட்டகத்தை (education pocket) அனைவர்க்கும் வழங்கினார். இதில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரிய சிறிய கையேடு, கையில் கட்டும் சிறிய ராக்கி, நன்னீர் உயிரின படம் போட்ட முகமூடி, வண்ண வண்ண மீன்கள் கொண்ட ஓட்டும் தாள்கள், விளம்பர அட்டை, நன்னீர் சட்டங்கள் குறிப்பு என அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது. அனைவரும் நன்னீர் உயிரினத்தின் அடையாளமாய் முகமுடிகளை அணிந்தும், ஒரு கையில் நன்னீர் பல்லுயிரியம் ராக்கியையும், கையில் விளம்பர அட்டையும் வைத்துக்கொண்டு எழுந்து நின்று நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ன கூறினார்கள்.
மேலும் அவர்கள் அனைவரும் தங்களின் நன்னீர் சூழலை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி உறுதி மொழி அட்டையில் எழுதி கொடுத்தார்கள்.
குறிப்பு:
மேற்கு தொடர்ச்சி மலை பல மில்லியன் மக்களுக்கு தினசரி வாழ்வாதாரமாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பலவகையான அரிய வகை தாவர, விலங்குகளுக்கு புகலிடமாகவும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று, நாம் அருந்தும் நீர், நமது சூழல், நமது அடுத்த சந்ததியினர், நமது பொருளாதாரம், நமது உடல்நலம் என எல்லாமே இந்த மலைகளையும், காடுகளையும், சார்ந்த மக்களையும் நம்பியே உள்ளது...அபரிமித மக்கள் தொகை பெருக்கமும், அதிக நுகர்வு கலாச்சாரமும், மாசுபாடுகளும், சுற்றுலாவும், இன்னும் பலவும் நமது அரிய வகை நன்னீர் உயிரினங்களை அழிவின் விளம்பில் நகர்த்தி உள்ளது.
இந்த நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் இனிதே தன் பயணத்தை துவங்கி உள்ளது. இது இவ்வாறாக கேரளம், கர்நாடகம், மகாராட்டிரம், கோவா வரை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும். இந்த நன்னீர் விழிப்புணர்வு இங்கு மெல்ல ஒரு செடியாய் முளைத்திருக்கிறது..இது மென்மேலும் பெரிய ஆலமரமாய் நம் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும், அதனை ஒட்டிய ஊர்களிலும் நன்னீர் பல்லுரிய பாதுகாப்பை பரப்பும்..
விடுமுறை நாள் என்றபோதும்
ஆர்வமாய் வந்திருந்த ஆசிரியர்கள் ..
சூழல் பற்றி செய்தி சேகரிக்க
கடைசிவரை அமர்ந்திருந்த ஊடக நண்பர்கள் ..
அச்சுறுத்தலில் நம் நன்னீர் விலங்குகளா
என பேசிக்கொண்டிருந்த இளம் மாணவர்கள் ..
சந்தோஷ முகங்களுடன் நம்
பள்ளி குழந்தைகள் ..
என இந்த நிகழ்ச்சி அற்புதமாய் முடிந்தது ..
புன்னகையுடனும், குழு நிழற்படதிடனும் இந்த நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
அனைவரும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் பிரவின் ....
0 comments:
Post a Comment